|
|
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.41 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள் பண் - கொல்லி |
கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.
|
1 |
மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.
|
2 |
கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.
|
3 |
வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.
|
4 |
படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.
|
5 |
நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.
|
6 |
கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.
|
7 |
இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.
|
8 |
மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.
|
9 |
பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.
|
10 |
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.114 திருவேகம்பம் (காஞ்சிபுரம்) - திருஇயமகம் பண் - பழம்பஞ்சுரம் |
பாயுமால்விடை மேலொரு பாகனே
பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானர் வேதத் துவனியே
சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே
ஆலநீழல் அரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.
|
1 |
சடையணிந்ததும் வெண்டலை மாலையே
தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூத கணங்களே
போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகடோறும் இரப்பது மிச்சையே
கம்பமேவி யிருப்பது மிச்சையே.
|
2 |
வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே
வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே
யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்பது கத்துமே
போனவூழி யுடுப்பது கத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
|
3 |
முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
|
4 |
வேடனாகி விசையற் கருளியே
வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுமாம்பரை யார்த்த துடையதே
யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே
குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே
கம்பமாபதி யாவது மும்மதே.
|
5 |
இரும்புகைக்கொடி தங்கழல் கையதே
இமயமாமகள் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே
ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல்நட மாடுதல் செய்துமே
பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
|
6 |
முதிரமங்கை தவஞ்செய்த காலமே
முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்த முருட்டியே
வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே
ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
|
7 |
பண்டரக்க னெடுத்த பலத்தையே
பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே
யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே
கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.
|
8 |
தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழுழி திரிந்துமே
சித்தமோடு கீழுழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே
கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.
|
9 |
ஓருடம்பினை யீருரு வாகவே
யுன்பொருட்டிற யீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
ஆற்றலெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே
சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.
|
10 |
கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே
காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்து விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே..
|
11 |
திருச்சிற்றம்பலம் |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|